
கடத்தப்பட்டு சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்ட லிபிய பிரதமர்! –
(திரிபோலி)
லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள ஒரு ஹோட்டலில் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட லிபிய பிரதமர் அலீ ஸைதான் சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த 5-ஆம் தேதி, அமெரிக்க அதிரடிப் படையினர் லிபியா தலைநகர் திரிபோலியில் தாக்குதல் நடத்தி, அனாஸ் அல் லிபி என்ற போராளியை பிடித்துச் சென்றனர். இதற்கு முன்னாள் அதிபர் கடாஃபிக்கு எதிராகப் போராடிய புரட்சிப் படையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை, திரிபோலியில் பிரதமர் அலீ ஸைதான் தங்கியிருந்த ஹோட்டலுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்ம நபர்கள், அவரைக் கடத்திச் சென்றதாக லிபிய அரசின் வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கடத்தப்பட்ட பிரதமர், எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பதோ, அவர் எதற்காகக் கடத்தப்பட்டார் என்பதோ தெரியவில்லை. முன்னாள் புரட்சிக் குழுக்களான லிபியா புரட்சி நடவடிக்கைக் குழுவோ, அல்லது குற்றத்துக்கு எதிராகப் போராடும் படையோதான் அவரை கடத்தியிருக்க வேண்டும்” என்று அரசு இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தாங்கள்தான் பிரமரை ‘கைது’ செய்துள்ளதாக “லிபியா புரட்சி நடவடிக்கைக் குழு” தனது ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. இந்தக் குழு, “லிபியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக,லிபியா குற்றவியல் சட்டத்தின் கீழ், அரசு உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் கடத்தப்பட்ட பல மணி நேரம் கழித்து அவர் விடுவிக்கப்பட்டதாக லிபியா வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் முஹம்மது அப்துல் அஜீஸ் கூறும்போது, “அவர் விடுதலை செய்யப்பட்டால் கூட, எந்தச் சூழலில் அவர் விடுவிக்கப்பட்டார் என்பது பற்றி முழுமையான தகவல் இல்லை” என்று தெரிவித்தார்.
முன்னதாக, லிபியாவில் அமெரிக்க அதிரடிப்படையினர் அல்-லிபியைக் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்திருந்த பிரமதர் அலீ ஸைதான், லிபியர்கள் அனைவரும் தங்களது சொந்த மண்ணில்தான் வழக்குகளை எதிர்கொள்ளவேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.