
கட்டாரில் 450 இந்தியர்கள் மரணம்
-புதுடெல்லி-
கத்தார் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் மரணம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2012-2013 ஆண்டில் மட்டும் கத்தாரில் உள்ள இந்தியர்கள் 450 பேர் மரணமடைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2012ல் மட்டும் 233 மரணங்களும் 2013ல் டிசம்பர் 5ம் தேதி வரை 218 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால் இம்மரணங்களுக்கான காரணங்கள் குறித்து சரியான காரணங்கள் இல்லை. கத்தாரில் உள்ள இந்திய தூதரகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்து இந்த புள்ளி விவரங்களை பெற்றுள்ளது.
“வருகின்ற 2022ஆம் ஆண்டு இந்நாட்டில் நடைபெறவுள்ள பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியைக் கருத்தில் கொண்டு இங்குள்ள தெற்காசிய உழைப்பாளர்கள் உறிஞ்சப்படுவதாலேயே இம்மரணங்கள் நிகழ்கின்றன. மேலும் வெளிநாடுகளிலிருந்து வரும் தொழிலாளர்கள் இந்நாட்டில் மிருகங்கள் போல நடத்தப்படுகின்றனர்” என சர்வதேச பொதுமன்னிப்பு சபை கருத்து தெரிவித்துள்ளது.
ஆனால், பிபா அமைப்பின் முதன்மை செயலதிகாரி தியோ சாவிங்கர் இதுகுறித்து கூறுகையில், “இங்கு 2022ல் நடைபெறும் போட்டியால் நன்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படும். ஆனால் பயங்கரமான இச்சம்பவம் பற்றி நன்கு பரிசீலனை செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
மேலும் கடந்த 2010ல் இருந்து நடைபெற்று வரும் இப்போட்டிக்கான கட்டுமானப்பணியின் போது இதுவரை சுமார் 400 நேபாளத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மரணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கத்தாரில் சுமார் ஐந்து லட்சம் இந்தியர்கள் வசிக்கலாம் என்று தெரிகிறது.