
தேசிய சூரா சபையின் புதிய நிறைவேற்று குழு தெரிவு!
தேசிய சூரா சபையின் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (27) கொழும்பில் நடைபெற்றது.
அதன் போது அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிறைவேற்றுக் குழு தெரிவு செய்யப்பட்டது.
தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர் அவர்களது தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில், கடந்த பொதுக் கூட்ட அறிக்கை மற்றும் கடந்த இரு வருடங்களில் சூரா சபை மேற்கொண்ட பணிகள் பற்றிய அறிக்கை என்பன, அதன் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம்.இம்தியாஸ் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.
நிதி அறிக்கையை மௌலவி ஸியாத் இப்ராஹிம் அவர்கள் சமர்ப்பித்தார்.
சூரா சபையின் உப தலைவர்களில் ஒருவரான அஷ்ஷைக் பளீல் அவர்கள் “சூரா சபை நேற்று, இன்று, நாளை” என்ற தலைப்பில் அதன் கடந்த கால செயற்பாடுகள் பற்றிய விரிந்த ஒரு விளக்கத்தை வழங்கினார்.
“இந்த சட்டம் நாட்டில் சமாதானத்தை கொண்டுவருவதற்கு பதிலாக 30 வருட கால யுத்தத்திற்கு காரணமாக இருந்தது. இது நாட்டை பாதாளத்தில் தள்ளியது. இதற்கு ஆரம்பத்தில் இருந்தவர்களும் இறுதியாக இருந்தவர்களும் பொறுப்புக் கூற வேண்டும். அவர்கள் அன்று சிந்தித்து செயல்பட்டிருந்தால் இன்று நாடு பிச்சை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
நாட்டில் மக்களுடைய கடமை என்ன, ஆட்சியாளர்களின் கடமை என்ன, பொறுப்பு என்ன, காரியங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி சிந்திப்பது அவசியம்” என்று அவர் கூறினார்.
கூட்டத்தின் போது தேசிய சூரா சபையின் சட்டக் கோவையில் திருத்தங்கள் முன்மொழிபட்டு அதுவும் அங்கீகரிக்கப்பட்டது.
மேற்படி பொதுச் சபைக் கூட்டத்தின் போது 35 பேர் கொண்ட நிறைவேற்று குழு தெரிவு செய்யப்பட்டது. தலைவராக சட்டத்தரணி அஸூர் அவர்களும் செயலாளராக சட்டத்தரணி ரஷீத் எம் இம்தியாஸ் அவர்களும் மீண்டும் தெரிவுசெய்யப்பட்டார்கள்.
உப தலைவர்களாக அஷ்ஷைக் பளீல், சட்டத்தரணி ஜாவித் யூசுப், எம்.எச்.எம்.ஹசன் ஆகியோரும் பொருளாளராக மௌலவி நெளபரும் தெரிவு செய்யப்பட்டார்கள்.
பல்கலைக்கழக பேராசிரியர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள், உலமாக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பொதுச்சபை உறுப்பினர்கள் பலரும் தேசிய சூரா சபையின் 11 உறுப்பு அமைப்புகளது பிரதிநிதிகளும் மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.