வெடுக்குநாறி விவகாரம் சபையில் பதற்றம்!

மஹா சிவராத்திரி அன்று   வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய அனுஷ்டானத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சபையில் போராட்டம் நடத்தியதையடுத்து பாராளுமன்றத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  8 பேரையும் விடுவிக்க வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் தவறான குற்றச்சாட்டின் பேரில் எட்டு பேரும் கைது செய்யப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பில் ஆராயவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்நிலையில் எழுந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அனைத்து மக்களுக்கும் அந்தந்த மதங்களை கடைபிடிக்கும் உரிமை இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 நீதிமன்றில் உள்ள விடயங்களில் அரசாங்கம் தலையிட முடியாது என தெரிவித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

“பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்களை எங்களால் விடுவிக்க முடியாது. அவர்கள் நீதிமன்றத்தால் மட்டுமே விடுவிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

Previous post ஜனாஸா எரிப்பிற்கு பொறுப்பேற்க மறுக்கும் கோட்டா – நூலில் எழு­தி­யி­ருப்­பது என்ன?
Next post கோட்டாவின் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் கைது!